Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தனி அறையில் மனைவி, ஆண் குழந்தையை பூட்டி வைத்துவிட்டு 3 மகள்களை வெட்டிக்கொன்று தவெக நிர்வாகி தற்கொலை: கடன் தொல்லையா? நாமக்கல் அருகே சோகம்

நாமகிரிப்பேட்டை: மூன்று மகள்களின் கழுத்தை வெட்டி கொலை செய்த தவெக நிர்வாகி, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த மங்களபுரம் அருகே வேப்பங்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35). இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ‘ரிக்’ வண்டிகளை வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கும் தனியார் அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றிய பொருளாளராகவும் இருந்தார்.

இவரது மனைவி பாரதி (26). இவர்களுக்கு பிரக்திஷாஸ்ரீ (10), ரித்திகாஸ்ரீ (7), தேவாஸ்ரீ (6), அனிஸ்வரன் (1) என நான்கு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, கோவிந்தராஜ் குடும்பத்தினருடன் உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர், பாரதி குழந்தை அனிஸ்வரனுடன் தூங்குவதற்காக படுக்கையறைக்கு சென்றார். வீட்டில் உள்ள ஹாலில் கோவிந்தராஜ், 3 பெண் குழந்தைகளுடன் தூங்கினார். நேற்று அதிகாலை 3 மணியளவில், தூக்கத்தில் இருந்து விழித்த கோவிந்தராஜ், மனைவி பாரதி தூங்கிக் கொண்டிருந்த அறையை, வெளிப்புறமாக சாவியை வைத்து பூட்டினார்.

பிறகு தன்னுடன் ஹாலில் தூங்கிக் கொண்டிருந்த 3 குழந்தைகளின் கழுத்தையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதனால் தூக்க கலக்கத்தில் இருந்த குழந்தைகள் அலறி துடித்தனர். அப்போது, அவர்களின் சத்தம் கேட்டு எழுந்த பாரதி, அறையின் கதவை திறக்க முயன்றபோது அது வெளிப்புறமாக பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால், அறைக்குள் இருந்தபடி சத்தம் போட்டுள்ளார். பின்னர், அங்கிருந்த மற்றொரு சாவியை எடுத்து அறையை திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது, அங்கு ரத்த வெள்ளத்தில் 3 குழந்தைகளும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

அவர்களின் அருகே கோவிந்தராஜ், வாயில் நுரைதள்ளியபடி இறந்து கிடந்தார். இதனை பார்த்து அலறிய பாரதியின் சத்தம் கேட்டு, அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி மங்களபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கோவிந்தராஜ் மற்றும் 3 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு விசாரித்தனர். அதில் கோவிந்தராஜ் 3 குழந்தைகளின் கழுத்தையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து நான்கு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ‘கோவிந்தராஜ் தனது தொழில் மற்றும் வீட்டு செலவுக்காக, ரூ.20 லட்சத்திற்கு மேல் வெளியில் கடன் வாங்கியுள்ளார். கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாததால், பல நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

அதனால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் நாமக்கல் மாவட்ட எஸ்பி விமலா நேரில் விசாரணை நடத்தினார். மேலும், கோவிந்தராஜ் கடன் வாங்கிய விவரங்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெற்ற குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* பொருளாதார நெருக்கடி இல்லை

கோவிந்தராஜ் தனது அக்கா மூலம் ரூ.13 லட்சம் வரை கடன் பெற்று, தற்போது வரை முறையாக அதற்கான தவணை தொகையை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் பூக்களை நடவு செய்துள்ளார். அதன் மூலமாகவும் கணிசமான வருவாய் ஈட்டி வந்துள்ளார். அதனால், பொருளாதார நெருக்கடியை அவரால் எளிதில் சமாளித்திருக்க முடியும் என உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

* சாவில் சந்தேகம்; தாய் புகார்

கோவிந்தராஜின் தாய் செல்வி போலீசாரிடம் கூறுகையில், ‘திம்மநாயக்கன்பட்டியில் உள்ள மகள் வீட்டிற்கு கடந்த 2 நாட்களுக்கு முன் சென்றேன். தகவலறிந்து இன்று (நேற்று) தான் வந்தேன். 3 மகள்கள் மீதும் என் மகன் அதிக பாசம் வைத்திருந்தார். அவர் குழந்தைகளை கொன்றிருக்க வாய்ப்பில்லை. மேலும், கடன் பிரச்னையும் இல்லை. அவரது சாவில் மர்மம் உள்ளது. இதுகுறித்து போலீசார் தீர விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கோவிந்தராஜின் மனைவி பாரதியிடம் போலீசார் விசாரித்த போது, கடன் பிரச்னையால் தான் கோவிந்தராஜ் மகள்களை கொன்று தற்கொலை செய்திருக்க வேண்டும்’ என கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், இருவரும் தெரிவித்த தகவல்களை பதிவு செய்துள்ளோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் குழந்தைகள் இறந்த நேரம், கோவிந்தராஜ் இறந்த நேரம், செல்வி மற்றும் பாரதி ஆகியோரின் தகவல்களை வைத்து, அதில் முரண்பாடு இருந்தால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.