Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரதமர் மோடியை சந்திக்கும் விவகாரம்; நயினார் பொய் சொல்லாதீங்க...இனியாவது உண்மையை பேசுங்க...ஓ.பன்னீர்செல்வம் பதிலடி

சென்னை: பிரதமர் மோடியை சந்திக்கும் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் பொய் சொல்லாமல் உண்மையை பேச வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்து உள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதில் எள்ளளவும் உண்மை இல்லை. எனவே, இதுகுறித்த உண்மை நிலையை தெரிவிப்பது என் கடமை. நயினார் நாகேந்திரனை ஆறு முறை கைபேசியில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன்.

ஆனால், நயினார் நாகேந்திரன் எனது அழைப்பை எடுக்கவில்லை. எனவே, நயினார் நாகேந்திரன் பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும் நயினார் நாகேந்திரன் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதை தொடர்ந்து, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகியோரை கலந்தாலோசித்த பின்னர் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு கடந்த 24ம் தேதி கடிதம் எழுதினேன். அந்த கடிதம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது.

உண்மையிலேயே நயினார் நாகேந்திரனுக்கு பிரதமரை நான் சந்திக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்குமேயானால், நான் செல்போனில் அழைத்த அழைப்பை பார்த்தோ அல்லது குறுஞ்செய்தியின் அடிப்படையிலோ என்னிடம் பேசியிருக்கலாம். அல்லது எனது கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அதற்கான ஏற்பாட்டினை செய்திருக்கலாம்.

ஆனால் எதையும் செய்யவில்லை. இதிலிருந்து, நான் பிரதமரை சந்திப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. எனவே, பிரதமரை சந்திப்பது தொடர்பாக நான் நயினார் நாகேந்திரனிடம் சொல்லவில்லை என்பது சரியல்ல, உண்மைக்கு புறம்பானது. நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பாஜ தலைவர் என்ற பொறுப்பில் இருக்கிறார். ஆகவே, இனியாவது அவர் உண்மை பேச வேண்டும் என்பதே எனது விருப்பம்.