சென்னை: கோவை வரும் பிரதமரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை சந்திக்கிறார். தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நாளை முதல் 21-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கோவை கொடிசியா அரங்கில் இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து பேசுகிறார். மேலும், சிறப்பாக செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு விருது வழங்குகிறார். இந்த மாநாட்டில் இயற்கை விவசாயிகள், இளம் விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர். இதில், பங்கேற்க பிரதமர் மோடி நாளை மதியம் 12.30 மணிக்கு ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 1.25 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார்.
மதியம் 1.30 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு 1.40 மணிக்கு கொடிசியா அரங்கம் செல்கிறார். அங்கு விழாவில் கலந்து கொண்ட பின்னர் மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு விமான நிலையத்தை அடைகிறார். பின்னர், விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடியின் கோவை வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் வாகனங்களை நிறுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே நாளை கோவை வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த பின்னர் முதல்முறையாக பிரதமரை சந்திக்கிறார். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் நடைபெறும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரதமர் மோடி - எடப்பாடி பழனிசாமி இடையேயான சந்திப்பின் போது கூட்டணி விவகாரம் மற்றும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது. பிரதமர் மோடியை சந்திக்க தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


