தூத்துக்குடி: தூத்துக்குடியில் தாயை அபகரித்ததால் பூசாரியை வெட்டிக் கொலை செய்த 17 வயது மகன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ராஜபதி கிராமத்தைச் சேர்ந்தவர் டெய்லர் முத்துராமலிங்கம்(44). இவரது மனைவி முத்து விஜயா(38). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன். ஏரல் அருகே சொக்கப்பழங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (38). இவர் அங்குள்ள கோயிலில் பூசாரியாக இருந்தார். அப்போது இவருக்கும், முத்து விஜயாவுக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கணவன், மனைவி இருவரும் 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
இதைத்தொடர்ந்து முத்து விஜயா, 2 மகள்களுடன் கோயில் பூசாரியான ரவியுடன் சேர்ந்து தூத்துக்குடி அருகே சோட்டையன்தோப்பு, ஆ.சண்முகபுரம் பகுதியில் வீடு எடுத்து வசித்துள்ளார். பூசாரி ரவிக்கு ஏற்கனவே திருமணமாகி மேரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். முத்து விஜயா - பூசாரி ரவி தொடர்பை அறிந்த பூசாரியின் மனைவி, குழந்தைகள் அவரை விட்டு பிரிந்து தனியாக சென்று விட்டனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி 3வது மைல் மடத்தூர் சாலை பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோயிலில் ரவி பூசாரியாக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சோட்டையன்தோப்பு மெயின் ரோட்டில் பங்க் எதிரே ஒரு பாஸ்ட் புட் கடையில் சாப்பாடு வாங்குவதற்காக பூசாரி ரவி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 2 பேர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ரவியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரவி இறந்தார். தாளமுத்துநகர் போலீசார் நடத்திய விசாரணையில் முத்துராமலிங்கத்தின் மகனான 17 வயது சிறுவன், தனது உறவினருடன் சேர்ந்து இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாண்டு பி.இ பயின்று வரும் சிறுவன், தாய் முத்து விஜயாவை, தந்தை முத்துராமலிங்கத்திடம் இருந்து பூசாரி ரவி பிரித்து அபகரித்து சென்றதால் வேதனையில் இருந்து வந்துள்ளார். இதற்காக பூசாரி ரவியை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டி பல நாட்களாக உறவினரான பால்பாண்டி என்பவருடன் பின் தொடர்ந்து சென்று நோட்டமிட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு பாஸ்ட் புட் கடைக்கு ரவி வந்தபோது அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து 17 வயது சிறுவனையும், உறவினரான பால்பாண்டியையும் கைது செய்தனர்.