திருப்பூர் : திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் கூனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் (50). இவர் பாதிரியாராக இருந்து, அப்பகுதியில் ஆதரவற்ற பள்ளி மாணவர்களுக்கான காப்பகம் நடத்தி வந்தார். தாய், தந்தை இழந்த குழந்தைகளை இந்த காப்பகத்தில் தங்க வைத்து அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்க வைத்தார்.
இந்தநிலையில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த காப்பகத்தில் தங்கி படித்த 14 வயது சிறுமியிடம் ஆண்ட்ரூஸ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அந்த சிறுமி உடல்நலக்குறைவால் வீட்டுக்கு சென்று தனது தாயாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார்.இதனால், அதிர்ச்சி அடைந்த தாயார் ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்து ஆண்ட்ரூசை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
காப்பகத்தில் தங்கி படித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியார் ஆண்ட்ரூசுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கோகிலா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.