Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சர்க்கரை, இதய நோய் உள்ளிட்ட 41 மருந்துகளின் விலை குறைப்பு: விலை நிர்ணய ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: சர்க்கரை நோய், இதய நோய், கல்லீரல் நோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் 41 மருந்தகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சர்க்கரை நோய், உடல் வலி, இதய நோய்கள், கல்லீரல் பிரச்னைகளுக்கான மருந்துகள், ஆன்டாசிட்கள், தொற்று மற்றும் ஒவ்வாமைக்கான மருந்துகள், மல்டிவைட்டமின்கள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 41 மருந்துகளின் விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘உலகிலேயே சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தற்போது மருந்து, மாத்திரைகளின் விலை குறைப்பால் 10 கோடிக்கும் அதிகமான சர்க்கரை நோயாளிகள் பயனடைவார்கள்.

ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் டபாக்லிஃப்ளோசின், மெட்ஃபோர்மின், ஹைட்ரோகுளோரைடு போன்ற மருந்துகளின் விலை ஒரு மாத்திரைக்கு ரூ.30 முதல் ரூ.16 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்துமா அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் புடசோனைடு மற்றும் ஃபார்மோடெரால் போன்ற மருந்துகள் ஒரு டோஸுக்கு ரூ.6.62 ஆக குறைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, 120 டோஸ் கொண்ட ஒரு பாட்டிலின் விலை ரூ.3,800 ஆக இருந்தது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் ஹைட்ரோகுளோரோதியாசைடு மாத்திரைகள் இப்போது ரூ.11.07ல் இருந்து ரூ.10.45க்கு கிடைக்கும்’ என்று கூறினர்.