சென்னை: விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியில் உள்ள நிலம் தொடர்பான பிரச்னையில், பட்டியலினத்தைச் சேர்ந்த செந்தாமரை என்பவரை மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் சாதியை சொல்லி திட்டி கடுமையாக தாக்கியுள்ளார். இது, சம்பந்தமாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட புகார் மீது வழக்கு பதிவு செய்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோட்டக்குப்பம் சரக துணை காவல் கண்கானிப்பாளருக்கு உத்தரவிடக் கோரி செந்தாமரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துணை கண்காணிப்பாளர் சுனிலை பணியிடை நீக்கம் செய்து, உத்தரவிட்டிருந்தார். சுனில் தற்போது தேனி மாவட்டம் டிஎஸ்பியாக உள்ள நிலையில் பணியிடை நீக்க உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் பணியிடை நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.