சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்கென ‘ப்ரிபெய்டு டாக்ஸி’ ஆன்லைன் புக்கிங் விரைவில் தொடங்குகிறது. சென்னை விமான நிலையத்தில் இயக்கப்படும் ப்ரீபெய்டு டாக்ஸிகளையே விமான பயணிகள் பயன்படுத்த விரும்புகின்றனர். சென்னை விமான நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட, ப்ரீபெய்டு டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. அந்தப் ப்ரீபெய்டு டாக்ஸிகள், விமான நிலைய ஆணைய அங்கீகாரத்துடன், அரசு வகுத்த விதிமுறைகளுக்கு உட்பட்டு, கட்டணங்கள் வசூலித்து செயல்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இயக்கப்படும் இந்த ப்ரீபெய்டு டாக்ஸிகளை, பயணிகள் முன்பதிவு செய்வதற்கு இணையதள வசதி இல்லாமல் இருக்கிறது. எனவே பயணிகள் விமானங்களில் இருந்து இறங்கி, இந்த ப்ரீபெய்டு டாக்ஸி கவுன்டர்களை தேடி கண்டுபிடித்து, பதிவு செய்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிலும் ப்ரீபெய்டு கவுன்டர்கள் உள்நாட்டு முனையம் வருகைப் பகுதியில், விமான நிலையத்தின் உள்பகுதியில் உள்ளது. ஆனால் சர்வதேச முனையத்தில், ப்ரீபெய்டு டாக்ஸி கவுன்டர்கள் உள்பகுதியில் இல்லாமல், வெளியில் மட்டும் இருப்பதால், பயணிகள் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதத்தில், சென்னை விமான நிலைய ப்ரீபெய்டு டாக்ஸி யூனியன், பயணிகள் வசதிக்காக, ஆன்லைன் புக்கிங் வசதியை புதிதாக தொடங்குகிறது. ‘சென்னை ஏர்போர்ட் ப்ரீபெய்டு டாக்ஸி ஆன்லைன் புக்கிங்’ என்ற ஆப் மூலம் எங்கிருந்தும் பயணிகள் நேரடியாக டாக்ஸி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவின் எந்த மாநிலங்களில் இருந்தும் இந்த ஆப் மூலம் டாக்ஸி புக் செய்யலாம். இந்த ஆப்பை டவுன்லோடு செய்தால், க்யூ ஆர் கோடு வரும். அதன் மூலம் பயணிகள் தாங்கள் பயணிக்க வேண்டிய இடம், நாள், நேரம் போன்றவைகளை பதிவு செய்தால், ப்ரீபெய்டு டாக்ஸி பயண கட்டணம் போன்ற விவரங்கள் வரும். அதை பயணிகள் ஏற்றுக்கொண்டு, ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்தலாம். அதன் பின்பு பயணி, பயண நேரத்தின் போது, சென்னை விமான நிலைய பிக்கப் பாயிண்ட் பகுதிக்கு நேரடியாக வந்து, தாங்கள் ஆன்லைன் புக் செய்ததை, அங்குள்ள ப்ரீபெய்டு டாக்ஸி ஊழியர்களிடம் காட்டியதும், அவர்களுக்கான டாக்ஸி உடனடியாக ஒதுக்கப்பட்டு, பயணிகள் டாக்ஸிகளில் பயணம் மேற்கொள்ளலாம்.
இதனால் பயணிகள் தாமதம் இன்றி பயணம் மேற்கொள்வதோடு, கூடுதல் கட்டணம் வசூலிப்பது போன்ற பிரச்னைகளும் ஏற்படாது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பயணிகள், விமான நிலையத்திற்கு வருவதற்கும், ஆன்லைன் மூலம் ப்ரீபெய்டு டாக்ஸி புக் செய்யலாம். உடனடியாக அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கே ப்ரீபெய்டு டாக்ஸி சென்று, பயணிகளை விமான நிலையத்திற்கு அழைத்து வரும். டாக்ஸி சென்று அழைத்து வருவதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்காமல், வழக்கமான சிங்கிள் பயணம் கட்டணமே வசூலிக்கப்படும். இந்த ஆன்லைன் புக்கிங் வசதி, சென்னை விமான நிலையத்தில் விரைவில் தொடங்கப்பட இருப்பதாக, சென்னை விமான நிலைய ப்ரீபெய்டு டாக்ஸி யூனியன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.