Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாமியார்களை அவமதித்ததாக புகார்; நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு: ‘இது வெறும் டிரெய்லர்தான்’ என மிரட்டல்

பரேலி: உத்தரபிரதேசத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள கோல்டி பிரார் கும்பல், இது வெறும் டிரெய்லர் தான் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம், பரேலி அடுத்த சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள பாலிவுட் நடிகை திஷா பதானியின் பூர்வீக வீட்டின் மீது, நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலுக்கு, தலைமறைவு தாதா கோல்டி பிரார் கும்பல் சமூக வலைதளம் மூலம் பொறுப்பேற்றுள்ளது.

பைக்கில் வந்த இருவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தின்போது, திஷாவின் தந்தையும், ஓய்வுபெற்ற காவல் துறை துணை கண்காணிப்பாளருமான (டி.எஸ்.பி.) மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக, இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. திஷாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக பரேலி காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து கோல்டி பிரார் கும்பல் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், நடிகை திஷா பதானியும், அவரது சகோதரி குஷ்பு பதானியும் இந்து மத ஆன்மீகத் தலைவர்களான பிரேமானந்த் மகராஜ் மற்றும் அனிருத்தாச்சார்யா மகராஜ் ஆகியோரை அவமதித்ததற்குப் பழிவாங்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்களது பதிவில், ‘இது வெறும் டிரெய்லர்தான். இனிமேல் அவரோ அல்லது திரையுலகைச் சேர்ந்த வேறு யாராவதோ எங்களது மதத்தை அவமதித்தால், அவர்களை வீட்டில் இருந்து வெளியே உயிருடன் வெளியேற விடமாட்டோம்’ என்றும் அந்த கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது. பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ் வீடு மற்றும் பாடகர் ஏ.பி. தில்லான் இல்லம் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, கோல்டி பிரார் கும்பல் சினிமா பிரபலங்களைக் குறிவைப்பது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.