Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வறுமை இல்லாத, பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலம் இதுதான் கம்பர் கண்ட கனவு: பொன்விழா நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக இருக்கிறது. இதுதான் கம்பர் கண்ட கனவு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை கம்பன் கழகம் பொன்விழா ஆண்டு நிறைவு விழா மயிலாப்பூரில் நேற்று நடந்தது. கம்பன் கழக தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி தலைமை தாங்கினார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூல் வெளியிட்டு விருதுகளை வழங்கினார்.

கம்பர் விருதை கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். இயற்றமிழ் அறிஞர் விருதை தெ.ஞானசுந்தரம், கம்பன் அடிசூடி பழ.பழநியப்பன், சாரதா நம்பி ஆரூரன், சொல்வேந்தர் சுகி.சிவம், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் பெற்றுக்கொண்டனர். முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரையாற்றினார். கம்பன் வாழ்த்தை நித்யஸ்ரீ மகாதேவன் வாசித்தார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

1999ல் இதே அரங்கில், நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் முன்னின்று நடத்திய கம்பன் விழாவில் கலைஞர் பங்கேற்றார். அந்த மேடையில் ஜெகத்ரட்சகனும் இருந்தார். அதற்கும் முன்னால், 1969ல் சா.கணேசன் காரைக்குடியில் நடத்திய கம்பன் விழாவிலும் கலைஞர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் என்ன சொன்னார் என்றால், “இந்த விழாவிற்கு வந்த என்னை ஆச்சரியத்தோடு பார்க்காதீர்கள், என்னை அழைத்து வந்தவர்களை ஆச்சரியத்தோடு பாருங்கள்” என்று நகைச்சுவையாக சொன்னார்.

நானும் அப்படித்தான், கம்பரின் தமிழுக்காகவும்-ஜெகத்ரட்சகனின் அன்புக்காகவும் இங்கு வந்திருக்கிறேன். இந்த சென்னை கம்பன் கழகத்தின் பொலிவுமிகு பொன்விழா நிறைவாக, அறிஞர்கள் பலரும் விருதுகள் பெற்றிருக்கிறார்கள். ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் ‘கவிச்சக்கரவர்த்தி கம்பர்’ விருதை கவிப்பேரரசு வைரமுத்து பெற்றிருக்கிறார். அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள்!

அண்ணா முதல்வரான காலத்தில்தான் சென்னை கடற்கரையில் கவி சக்கரவர்த்தி கம்பருக்கு சிலை வைக்கப்பட்டது. வடபுலத்தைச் சேர்ந்த வால்மீகி எழுதிய ராமாயணத்தை தமிழ் மண்ணின் மணம் மணக்க கம்பர் எழுதியது நமக்கு தெரியும். அயோத்தியின் பெருமையை சொல்லும்போது கூட, காவிரி நாட்டுடன் ஒப்பிட்டவர் கம்பர். ராமனை அவதாரமாக காட்டுவது வால்மீகியின் பார்வை.

ஆனால், சக்கரவர்த்தியின் மகனாக தொடங்கி, கோசலை நாட்டு சக்கரவர்த்தியாக முடிப்பது கம்பரின் பார்வை. கதையில் வரும் அரசர்கள் பெயரை தமிழுக்கு மொழிபெயர்த்தவர் கம்பர். ‘கம்பன் கண்ட சமரசம்’ என்ற புத்தகத்தை எழுதிய நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் கம்பன் கழக விழாக்களை தொடர்ந்து நடத்தி, கம்பனின் தமிழில் சமூக ஒற்றுமையைக் கண்டார்.

1989ல் இதே கம்பன் கழக விழாவில் உரையாற்றிய தலைவர் கலைஞர், “கம்பனின் கவிதைகளில் தீட்டிய கனவாம் வளம் கொழிக்கும் திருநாட்டை உருவாக்க உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டார். “வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்” என்று கம்பர் சொன்னார். அப்படி வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக இருக்கிறது. இதுதான் கம்பர் கண்ட கனவு. இத்தகைய மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதும் கம்பருக்கு ஆற்றும் தொண்டுதான் என்று இங்கு கூடியிருக்கும் இலக்கிய ஆளுமைகள் எல்லோரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.