Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வன்முறையை தூண்டும் வகையில் பதிவு ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக காவல் துறையினர், இருவரை கைது செய்துள்ளனர். இது சம்பந்தமாக அந்த கட்சியின் தேர்தல் குழு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனது எக்ஸ் தள பக்கத்தில், இலங்கை, நேபாளத்தை போல புரட்சி வெடிக்கும் எனக் கருத்துகளை பதிவிட்டிருந்தார். தேச பாதுகாப்புக்கும், நல்லிணக்கத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்து பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணாநகரை சேர்ந்த எஸ்.எம்.கதிரவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, ஆதவ் அர்ஜுனா மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த மனு செல்லத்தக்கதல்ல என காவல் துறை தரப்பில் தெரிவித்து ஆதவ் அர்ஜுனாவின் எக்ஸ் தள பக்க பதிவு நீதிபதியிடம் காட்டப்பட்டன. இதையடுத்து, நீதிபதி செந்தில்குமார், ‘‘ஒரு சின்ன வார்த்தையும் பெரிய பிரச்னை ஏற்படுத்திவிடும். இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா?. புரட்சி ஏற்படுத்துவது போல கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில், பொறுப்பற்ற பதிவுகள் மீது காவல்துறை கவனத்துடன் வழக்கு பதிவு செய்து, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.