Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆபாச வீடியோ அனுப்பி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது: தகாத உறவு காதலியுடன் சிக்கினார்

சேலம்: தாரமங்கலம் அருகே, மனைவிக்கு ஆபாச வீடியோவை அனுப்பி வைத்து தற்கொலைக்கு தூண்டிய கணவன், ஒன்றரை மாதத்திற்கு பின்பு காதலியுடன் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள துட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (44). குடும்பத்துடன் பெங்களூருவில் தங்கியிருந்து, கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சாந்தி (36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் படித்து வருகின்றனர். இந்நிலையில், உறவினரான சின்னப்பொண்ணு (43) என்பவருடன், ஜெய்சங்கருக்கு பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது. இந்த உறவு சாந்திக்கு தெரிய வரவே, கணவனை கண்டித்துள்ளார். அதனை கண்டு கொள்ளாத ஜெய்சங்கர், தகாத உறவை தொடர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் தகாத உறவு காதலியுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோவை சாந்தியின் செல்போனுக்கு ஜெய்சங்கர் அனுப்பி வைத்தார். மேலும், ‘‘இதுபோல், உன்னால் எனக்கு சந்தோசம் கொடுக்க முடியாது’’ என மெசேஜ் அனுப்பினார். இதனால், மன வேதனை அடைந்த சாந்தி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக ஜெய்சங்கர் மற்றும் அவரது காதலி சின்னப்பொண்ணு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, அவர்கள் தலைமறைவாகி விட்டனர். இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால், போலீசில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், தாரமங்கலம் அருகே பண்ணப்பட்டி பகுதியில், உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த இருவரையும், நேற்று தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். சின்னப்பொண்ணுவுக்கு திருமணமாகி 5 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். குடும்பத்தை பிரிந்த அவர், கடந்த ஒன்றரை மாதமாக ஜெய்சங்கருடன் ஊர் ஊராக சுற்றி வந்துள்ளார். ஜெய்சங்கருக்கு மேலும் 2 பெண்களுடன் தொடர்பிருப்பதும் தெரியவந்துள்ளது.