பூந்தமல்லி: பூந்தமல்லியில் கஞ்சா வைத்திருந்த வடமாநில வாலிபரை நேற்று மாலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரது சூட்கேசில் இருந்து 10 கிலோ கஞ்சா பார்சல் பறிமுதல் செய்யப்பட்டது. பூந்தமல்லி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நேற்று பூந்தமல்லி, குமணன்சாவடி பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷினி தலைமையில் எஸ்ஐ நாட்டாளம்மை மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் சந்தேக நிலையில் ஒரு வடமாநில வாலிபர் கையில் சூட்கேசுடன் சுற்றி திரிவதை போலீசார் கண்டறிந்தனர். அவரது சூட்கேசை போலீசார் சோதனை செய்தனர். அதற்குள் 10 கிலோ கஞ்சா பார்சல் இருந்தது. விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கனாநாத் மாலிக் (33) என்பதும், இவர் ஒடிசாவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி, ரயிலில் கடத்தி வந்து, பூந்தமல்லி பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
