சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் முதல் முறையாக 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இதுபற்றி அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது
விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1080-க்கும் மேற்பட்ட டீலக்ஸ் மற்றும் ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இப்போது முதல் முறையாக 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்களை இயக்க உள்ளோம்.
சட்டசபையில் ஏற்கனவே இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி ஒவ்வொரு பஸ்சும் ரூ.1.15 கோடி மதிப்பில் வாங்கப்படுகிறது. இந்த பஸ் 15 மீட்டர் நீளம் உடையது. இதற்கான கொள்முதல் ஆணை வால்வோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த வால்வோ பஸ் வழக்கமான பஸ்சை விட பெரியதாக இருக்கும். ஒரே நேரத்தில் 51 பேர் பயணம் செய்ய முடியும். அதிர்வுகள் இல்லாமல் பயணிக்கலாம். சொகுசு படுக்கை வசதி, ஏ.சி. வசதி, மொபைல் போன் சார்ஜிங் வசதி, வைபை, பயணிகளுக்கு தனிப்பட்ட ரீடிங் விளக்குகள் ஆகிய வசதிகள் இதில் இடம் பெறுகிறது. ஆம்னி பஸ்களுக்கு இணையாக வாங்கப்பட்டு உள்ள வால்வோ பஸ் பொங்கலுக்கு பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.