*கூடுதல் விலைக்கு விற்பனை
பொள்ளாச்சி : பொள்ளாச்சி காந்தி தினசரி மார்க்கெட்டின் ஒரு பகுதியில், வாரத்தில் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் வாழைத்தார் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது.
சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
கடந்த 2 வாரமாக அவ்வப்போது மழையால், சுற்றுவட்டார பகுதியில் இருந்து மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் வாழைத்தார்களின் வரத்து சற்று குறைவானது. இருப்பினும் சுப முகூர்த்தம் உள்ளிட்ட விசேஷ நாட்கள் இல்லாததால், அனைத்து ரக வாழைத்தார்களும் குறைவான விலைக்கே விற்பனையானது.
இந்நிலையில், இந்த வாரத்தில் நேற்று நடந்த சந்தை நாளின்போது, பொள்ளாச்சி மற்றும் சேத்துமடை, ஆனைமலை, ஒடையக்குளம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் தூத்துக்குடி, கரூர், திருச்சி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்தது. வரத்து அதிகமாக இருந்தாலும், அனைத்து ரக வாழைத்தார்களும், இன்று (27ம் தேதி) மற்றும் வரும் 31ம் தேதி என இந்த வாரத்தில் அடுத்தடுத்து முகூர்த்த நாட்களாக இருப்பதால், கூடுதல் விலை நிர்ணயித்து விலை போனது.
செவ்வாழை தார் ஒன்று (கிலோ கணக்கில்) ரூ.65 வரையிலும், சாம்ராணி ரூ.42க்கும், பூவந்தார் ரூ.38க்கும், மோரீஸ் ரூ.38 க்கும், ரஸ்தாளி ரூ.45க்கும், நேந்திரன் 1 கிலோ ரூ.42க்கும், கேரள ரஸ்தாளி ஒரு கிலோ ரூ.500க்கு என கூடுதல் விலைக்கு ஏலம் போனது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
