அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இளைஞர்களின் வேலைவாய்ப்பில் விளையாடுவதா? அமைச்சர் டிஆர்பி ராஜா கண்டனம்
சென்னை: தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவு: தனது குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தில் கொட்டி தீர்க்கிறார் ஒருவர். அரசியல் காழ்ப்புணர்ச்சி மிகுந்த சிறுபிள்ளைத்தனமான அறிக்கையை வெளியிடுவதை இனி அவர் நிறுத்திக்கொள்ளவேண்டும்.
நேற்று முன்தினம் பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்து 14,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தது என்பது உறுதியான, சரியான, எந்தவித தவறும் இல்லாத 100/100 உண்மையான செய்தி. இது ஏறத்தாழ ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு உறுதி ஆகியிருக்கும் வேலைவாய்ப்புகள். பல மாதங்களாக ஒரு சில ஊடகங்கள் அரசு எந்தவித ஒப்பந்தங்கள் செய்தியையும் உறுதிசெய்யாத சூழலில் அவர்களாக யூகித்து எழுதிய செய்திகளை பழைய திட்டம் என்று கூறுவது ஏற்புடையதல்ல.
ஒரு திட்டம் வேலை வாய்ப்புகளாக மாறும் என்று அரசுக்கு முழுமையான நம்பிக்கை வந்த பிறகே அதை துறையோ அல்லது நானோ உற்திசெய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். நடப்பு உலகளாவிய வர்த்தக சூழல் தெரியாமல் யார் எதற்காக எதை சொல்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியாமல், அல்லது புரிந்துகொண்டே நடிப்பவர்களுக்கு நாம் எதையும் சொல்ல முடியாது. இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.