Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நான் என்ன புழுவா பாஜ விழுங்குவதற்கு..? எடப்பாடி பழனிசாமி கேள்வி

கும்பகோணம்: மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அவர் பேசுகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி பாஜவுடன் கூட்டணி வைத்து விட்டார். பாஜ விழுங்கி விடும் என்கின்றனர். எடப்பாடி பழனிசாமி என்ன புழுவா? மீன் தின்பதற்கு என்றார்.

பின்னர் இரவு கும்பகோணத்தில் உள்ள ஓட்டலில் தங்கினார். அந்த ஓட்டலில் நேற்று தொழிலதிபர்கள், விவசாயிகள், வணிகர்கள், தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட நெசவாளர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பின்னர் நிருபர்களிடம் கூறும்போது, அதிமுகவின் எழுச்சி பயணம் மிகச்சிறப்பாகவும், எழுச்சியாகவும் இருக்கிறது என்றார்.

கும்பகோணம் அருகே பாபநாசத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. தேர்தல் சமயத்தில் வாக்குகளை பெற அமைப்பது கூட்டணி. அதிமுக, கொள்கையை எப்போதும் விட்டுக்கொடுக்காது என்றார்.

தொடர்ந்து தஞ்சாவூரில் நேற்று இரவு எடப்பாடி பேசுகையில், பாஜவுடன் கூட்டணி வைத்தால் என்ன தப்பு. நாங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். எங்களுக்கு விருப்பம் உள்ளவருடன் கூட்டணி வைத்து கொள்வோம். இதில் என்ன தவறு இருக்கிறது. திருமாவளவன் ஒரு பேட்டியில், எடப்பாடி துணை முதல்வர் பதவி கொடுக்கிறேன் என்கிறார், அதிக சீட் கொடுக்கிறேன் என்கிறார் என கூறியுள்ளார் நாங்கள் எங்கு கூறினோம். எங்களை வைத்து அடையாளப்படுத்தாதீர்கள் என்றார்.