‘’முதலமைச்சராக்கிய சசிகலாவையே யார் என்று கேட்டவர்’’ துரோகம் பற்றி இபிஎஸ் பேசுவதா?.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு தாக்கு
பெரம்பூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ‘’மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, இன்று காலை புளியந்தோப்பு, சூளையில் நடைபெற்ற ‘’அன்னம் தரும் அமுதக் கரங்கள்’’ நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு காலை உணவு வழங்கினார். இதன்பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது; எதிர்க்கட்சியினர் முதலமைச்சரை சந்திப்பது துரோகத்தின் வெளிப்பாடு என்று எடப்பாடி கூறியுள்ளாரே?
எடப்பாடி அமித்ஷாவை சந்தித்ததை எப்படி எடுத்துக் கொள்ளலாம்? மோடியை நான்கு கார்களில் மாறி மாறி சென்று சந்தித்ததை எப்படி எடுத்துக் கொள்ளலாம்? முதல்வரின் சிறிய உடல்நலக்குறைவின் காரணமாக இல்லத்தில் வந்து சந்தித்ததை எப்படி துரோகம் என்று சொல்ல முடியும்? மனிதநேயம் உள்ள மனிதாபிமானம் உள்ள யாரும் இதனை துரோகம் என்று ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். துரோகத்தின் சாயல் படிந்தவர், தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவையே யார் என்று கேட்டவர், துரோகத்தைப் பற்றி பேசக்கூடாது. இவ்வாறு கூறினார். இந்த நிகழ்ச்சியில் தமிழன் பிரசன்னா, பகுதி செயலாளர் சோ.வேலு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.