நாமக்கல்: நாமக்கல் மாவட்ட பாஜ அலுவலகத்தில், பாஜ முன்னாள் மாநில தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி, ஆசைவார்த்தை கூறி அவர்களின் சிறுநீரகத்தை முறைகேடாக பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் டிஎஸ்பியை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து விசாரிக்காமல், அவரை சஸ்பெண்ட் செய்வது எவ்விதத்திலும் நியாயம் அல்ல. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட டிஎஸ்பிக்கு நியாயமும், நீதியும் வழங்க வேண்டும். அதிமுக -பாஜ கூட்டணியில் சர்ச்சை எதுவும் இல்லை. ஒரு நோக்கத்திற்காக, ஒரே புள்ளியில் தே.ஜ கூட்டணியாக இணைந்துள்ளோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட தலைவர்கள் பேசுவார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை அறிவித்து விட்டோம். இதில் எவ்விதமான குழப்பமும் இல்லை. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.