பீகார் தேர்தலில் லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2020 தேர்தலில் 75 தொகுதிகளில் வென்ற லாலு கட்சி இவ்வளவு மோசமாக தோற்றது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் லாலுபிரசாத் மகள் ரோகிணி ஆச்சார்யா நேற்று அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். மருத்துவம் படித்த அவர், சிங்கப்பூரில் வசித்து வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானம் செய்தார். கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் சரண் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரது மூத்த சகோதரர் தேஜ்பிரதாப் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்து வந்தார். இருப்பினும் தேர்தலில் அவர் தேஜஸ்விக்காக பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் தனது எக்ஸ் பதிவில், ‘நான் அரசியலை விட்டு வெளியேறுகிறேன், என் குடும்பத்தை விட்டு விலகுகிறேன.
சஞ்சய் யாதவும், ரமீஸும் என்னிடம் கேட்டது இதுதான். நான் எல்லாப் பழியையும் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.சஞ்சய் யாதவ் ஆர்ஜேடியின் மாநிலங்களவை எம்.பி. . இவர் லாலு பிரசாத்தின் மகனும், அரசியல் வாரிசுமான தேஜஸ்வி யாதவின் மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவர். ரமீஸ் அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த தேஜஸ்வியின் பழைய நண்பர் ஆவார். அவர்கள் ரோகிணி ஆச்சார்யாவிடம் என்ன சொன்னார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது லாலு குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


