சாவோ லூயிஸ்: பிரேசிலில் இளம் பெண் அரசியல்வாதியும், சமூக வலைதள பிரபலமுமான ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டின் சாவோ லூயிஸ் நகருக்கு அருகே உள்ள லாகோ வெர்டே பகுதியைச் சேர்ந்த சமூக வலைதள பிரபலமான பெர்னாண்டா ஒலிவேரா டா சில்வா (30), உடற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறைகளைப் பகிர்ந்து மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். அதேசமயம், கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று லாகோ வெர்டே நகரின் கவுன்சிலராகப் பதவியேற்றார்.
மேலும், 2021 முதல் 2024 வரை இரண்டு முறை மாநகர சபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம ்தனது வீட்டில் பெர்னாண்டா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். பெர்னாண்டாவின் திடீர் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மறைவிற்கு மரியாதை செலுத்தும் வகையில், லாகோ வெர்டே நகரில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மாநகர சபை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து மாநகர சபை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘கவுன்சிலர் பெர்னாண்டா மரோக்காவின் மரணத்திற்கு லாகோ வெர்டே நகரம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது. பெர்னாண்டாவின் மரணச் செய்தி வெளியானதிலிருந்து, அதிர்ச்சியடைந்த ரசிகர்களும் நண்பர்களும் சமூக ஊடகங்களில் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
