Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐகோர்ட் கிளையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று அதிகாலை பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி பொட்டியம்மா. இவர்களது இளைய மகன் மகாலிங்கம் (30). ஆயுதப்படை போலீஸ்காரரான இவர், ஐகோர்ட் கிளையில் இரவில் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு மகாலிங்கம் உள்ளிட்ட ஆயுதப்படை போலீஸ்காரர்கள் ஐகோர்ட் கிளை பிரதான நுழைவு வாயில் பகுதியில் எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை 3 மணியளவில் பாதுகாப்பு பணியில் இருந்த மகாலிங்கம், துப்பாக்கியை ஏந்திக் கொண்டு அங்கும் இங்குமாக நீண்ட நேரம் நடந்து ெகாண்டிருந்தார்.

இதை பார்த்த மற்ற காவலர்கள் குளிராக இருப்பதால் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருக்கிறாரே என எண்ணினர். இந்நிலையில், மகாலிங்கம் தான் வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென தன்னைத்தானே நெஞ்சில் சுட்டு ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக போலீஸ்காரர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர். இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மகாலிங்கத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் இறந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. போலீஸ்காரர் மகாலிங்கம் தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், மகாலிங்கம் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என கூறி கடிதம் எழுதிவைத்த பிறகே தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. தற்கொலை செய்த மகாலிங்கத்திற்கு ஒரு அண்ணன், இரண்டு சகோதரிகள் உள்ளனர். இதில், அண்ணன் காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.