காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினத்தை சேர்ந்தவர் மனோஜ். இவர் தனது காதலியுடன் காரைக்கால் கடற்கரைக்கு கடந்தாண்டு செப்டம்பர் 19ம் தேதி சென்றார். அப்போது கடற்கரை பகுதியில் உள்ள கடலோர காவல் நிலைய புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர் ராஜ்குமார்(35) ரோந்து சென்றபோது காதல் ஜோடியை பார்த்து போலீஸ் பூத்துக்கு அழைத்து சென்று விசாரித்தார்.
மேலும் காதலனை அருகில் உள்ள கடைக்கு சென்று தண்ணீர் வாங்கி வருமாறு அனுப்பி வைத்து விட்டு இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ராஜ்குமார் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் மனோஜிடம் இருந்து ரூ.3 ஆயிரத்தை பறித்துள்ளார். இதுகுறித்து தங்களது உறவினர்களுக்கு காதல் ஜோடி தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் பூத்துக்கு காதல் ஜோடியின் உறவினர்கள், நண்பர்கள் வந்து முற்றுகையிட்டதுடன் காவலர் ராஜ்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் நடந்த சில வாரங்களில் காவலர் ராஜ்குமாரை பணியிடை நீக்கம் செய்து அப்போதைய எஸ்எஸ்பி மணீஷ் உத்தரவிட்டிருந்தார். மேலும் மனோஜ் அளித்திருந்த புகாரின்பேரில் காரைக்கால் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் குற்றச்சாட்டு உறுதியானதால் காவலர் ராஜ்குமாரை பணிநீக்கம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் நேற்று உத்தரவிட்டது.
