சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்வு முகாமில் பெண்கள் மற்றும் முதியவர்கள் என 18 பேரிடம் நேரடியாக போலீஸ் கமிஷனர் அருண் புகார் மனுக்கள் பெற்றார். சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், ஒவ்வொரு புதன் கிழமைகளில் பொதுமக்களுக்கான குறைதீர்வு முகாம் நடந்து வருகிறது. அதன்படி இன்று நடந்த பொதுமக்கள் குறை தீர்வு முகாமில், போலீஸ் கமிஷனர் அருண் கலந்து கொண்டு, பெண்கள் மற்றும் முதியவர்கள் என மொத்தம் 18 பேரிடம் தனித்தனியாக மனுக்கள் பெற்று, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பிறகு வாங்கிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு கமிஷனர் அருண் உத்தரவிட்டார். அதைதொடர்ந்து புகார் மனுக்கள் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியின் போது சென்னை காவல்துறை தலைமையிட துணை கமிஷனர் கீதா உடன் இருந்தார்.


