போலி சமூக வலைதள கணக்கு மூலம் காதல் வலையை வீசி குற்றவாளியை பிடித்த போலீஸ்: பெங்களூரு டூ டெல்லி இடையே பரபரப்பு
புதுடெல்லி: கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை, பெண் காவலர் ஒருவர் சமூக வலைதளம் மூலம் காதல் வலையில் வீழ்த்தி கைது செய்துள்ளார். டெல்லியின் வடமேற்கு பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம், ராகுல் என்பவர் தனது கூட்டாளிகளான சாஹில், தினேஷ், கிருஷ்ணா ஆகியோருடன் சேர்ந்து ஒருவரைக் கத்தியால் குத்தியதாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய சாஹில், தினேஷ், கிருஷ்ணா ஆகியோரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். ஆனால், முக்கிய குற்றவாளியான ராகுல் மட்டும் தப்பித்து, நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார்.
காவல்துறையிடம் சிக்காமல் இருப்பதற்காக, அவர் செல்போன் அழைப்புகளை முற்றிலுமாக தவிர்த்து, சமூக வலைதளங்களில் மட்டும் தீவிரமாக இயங்கி வந்துள்ளார். ராகுலின் சமூக வலைதள பயன்பாட்டைக் கண்டறிந்த டெல்லி போலீசார், அவரைப் பிடிக்க ‘டிஜிட்டல்’ வழியிலான நூதன திட்டம் ஒன்றை வகுத்தனர். இத்திட்டத்தை செயல்படுத்த, ‘கோமல்’ என்ற பெண் காவலர் நியமிக்கப்பட்டார். அவர், போலி பெயரில் சமூக வலைதள கணக்கு ஒன்றை தொடங்கி, ராகுலுக்கு நட்பு அழைப்பு விடுத்தார். ராகுலும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதை அடுத்து, கோமல் அவரிடம் சில நாட்கள் தொடர்ந்து பேசி, அவரது நம்பிக்கையை பெற்றார்.
சுமார் 10 நாட்கள் தொடர் உரையாடலுக்குப் பிறகு, கோமல், ராகுலை டெல்லியின் வடமேற்கு பகுதிக்கு நேரில் சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார். இதை உண்மை என நம்பிய ராகுல், அவரைச் சந்திக்க பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு வந்துள்ளார். அப்போது, சந்திப்பதாகக் கூறிய இடத்தில் ஏற்கனவே மறைந்திருந்த தனிப்படை போலீசார், ராகுலை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை, பெண் காவலர் ஒருவர் சமூக வலைதளம் மூலம் காதல் வலையில் வீழ்த்தி கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
