Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காதலை ஏற்க மறுத்ததால் மாணவி மீது துப்பாக்கிச்சூடு: அரியானா வாலிபருக்கு போலீஸ் வலை

பரிதாபாத்: காதலை ஏற்க மறுத்த 17 வயது பள்ளி மாணவியை, இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம், பரிதாபாத் மாவட்டத்தின் பல்லப்கர் பகுதியில் ஷியாம் காலனியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், நேற்று மாலை தனது பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஜதின் மங்லா என்ற வாலிபர் அந்த மாணவியை வழிமறித்துள்ளார்.

ஜதின், அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாகவும், தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மாணவி அவரது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ஜதின், தனது பையில் எதையோ மறைத்து வைத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தின் அருகே மாணவிக்காக காத்திருந்தார். அந்த மாணவி தெருவிற்குள் நுழைந்தவுடன், ஜதின் திடீரென துப்பாக்கியை எடுத்து மாணவியை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். அவருடன் வந்த இரண்டு மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில், ஒரு குண்டு மாணவியின் தோள்பட்டையிலும், மற்றொரு குண்டு வயிற்றிலும் பாய்ந்தது.

வலியால் துடித்த மாணவி உதவி கேட்டு கதற, ஜதின் தனது பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தோழி, மீண்டும் ஓடிவந்து அவருக்கு உதவினார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளி பயன்படுத்திய துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.

மேலும், போலீசார் கூறுகையில், ‘முதற்கட்ட விசாரணையில், குற்றவாளி பாதிக்கப்பட்ட மாணவிக்கு முன்பே பழக்கமானவர் என்பது தெரியவந்துள்ளது. மாணவியும் குற்றவாளியை அடையாளம் காட்டியுள்ளார். நாங்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். குற்றப்பிரிவு போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்’ என்றனர்.