சென்னை: 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அபூபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோரை ஆறு நாட்கள் காவலில் எடுத்து தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலக சுவரில் வெடிகுண்டு வைத்தது உள்பட சென்னையில் ஐந்து வழக்குகள், கேரளாவில் இரண்டு வழக்குகள் என மொத்தம் ஏழு வழக்குகளில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட அபூபக்கர் சித்திக்கை சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடித்த வழக்கு, அத்வானி ரத யாத்திரையின் போது மதுரை திருமங்கலம் அருகே குண்டு வைத்த வழக்கு, நாகை இந்து முன்னணி மாவட்ட தலைவரின் மனைவி தங்கத்தை வெடிகுண்டு பார்சல் அனுப்பி கொன்ற வழக்கு, பாஜ மாநில மருத்துவ அணி செயலாளர் வேலூர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு போன்ற வழக்குகளில் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்தனர்.