*மாடுகளை வாங்க ஆர்வம் காட்டிய வியாபாரிகள்
வேலூர் : பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று அதிகளவில் கால்நடைகள் குவிந்ததால் சந்தை களைக்கட்டியதால் வியாபாரிகள் மாடுகள் வாங்க ஆர்வம் காட்டினர்.
வேலூர் அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணா மலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
சாதாரணமாக இங்கு விற்பனை என்பது ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அப்போதைய சூழலுக்கு ஏற்ப நடைபெறும்.கடந்த வாரங்களில் குறைந்த அளவிலேயே கால்நடைகள் வந்ததால் விற்பனையும் ரூ.60 முதல் 70 லட்சம் வரையே இருந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த சந்தைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள், கோழிகள் என கால்நடைகள் குவிந்து சந்தை களைக்கட்டியது. வியாபாரிகளும் மாடுகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால் விற்பனையும் இன்று கால்நடைகள் உட்பட பிற கால்நடைகளுக்கு தேவைப்படும் பொருட்கள் என அனைத்தும் சேர்ந்து வர்த்தகம் ரூ.90 லட்சம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் தீவனம் தட்டுப்பாடு இல்லை. இதனால் மாடுகள் வரத்து நேற்று 1200க்கும் மேற்பட்ட அதிகளவில் உள்ளது. தற்போது கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், சந்தைக்கு வந்தது.
இவைகளின் விலை சற்று அதிகமாக உள்ளது. இதனால் விற்பனையும் ரூ.90 லட்சம் வரை நடந்தது. விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் மாடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயிகளும் தங்களுக்கு ஏற்ற விலை கிடைப்பதால் மாடுகளை விற்பனை செய்தனர்’ என்றனர்.