சென்னை: பாமக சட்டமன்ற குழு தலைவராக வெங்டேஸ்வரன் தேர்வு செய்துள்ளோம் என கே.பாலு தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் அன்புமணியை கட்சியை விட்டே நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். இந்நிலையில், கட்சியையும் சின்னத்தையும் கைப்பற்றுவதில் இரு தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் பாமக சட்டமன்றக் கொறடா அருளை மாற்றக் கோரி ஏற்கெனவே ட்டப்பேரவைச் செயலாளரிடம் மனு அளித்திருந்தனர். 5 பாமக எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் அன்புமணி அணியிலும், 2 பேர் ராமதாஸ் அணியிலும் உள்ளனர்.
வரும் 14ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பாமகவில் மோதல் உச்சம் அடைந்துள்ளது. இந்நிலையில் பாமக சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே.மணியை மாற்றக் கோரி அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைச் செயலாளரிடம் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வழக்கறிஞர் வழக்கறிஞர் கே. பாலு; தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரனை சட்டமன்ற பாமக தலைவராக தேர்வு செய்துள்ளோம். பாமக தொண்டர்கள் அன்புமணி தலைமை ஏற்று செயல்பட்டு வருகின்றனர். பாமக எம்.எல்.ஏ.க்கள் 5 பேரில் 3 பேரின் ஆதரவு அன்புமணிக்கே உள்ளது.
அனைத்து கட்சி கூட்டம் உள்ளிட்டவற்றுக்கு எங்களையே அழைக்க வேண்டும். சின்னம், வேட்பாளர் படிவம் உள்ளிட்டவற்றில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கே உண்டு. பீகாரில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் கட்சி முடிவு எடுக்கும் என்று கூறினார். சட்டமன்றத்தின் முதல் வரிசையில் பாமக சார்பில் அமரப்போவது ஜி.கே.மணியா, வெங்கடேஸ்வரனா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.