Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாமக பொதுக்குழு நாளை கூடும் நிலையில் தைலாபுரம் வந்த அன்புமணி சந்திக்க மறுத்தார் ராமதாஸ்

திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், கடந்த 9ம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணிபொதுக்குழுவை கூட்டி இருந்தார். இதே போல் ராமதாஸ் தரப்பில் பட்டனூரில் நாளை (17ம் தேதி) பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அப்போது அன்புமணியின் செயல் தலைவர் பதவி பறிக்கப்படலாம் என அக்கட்சி வட்டாரத்தில் தகவல் கசிந்து வருகிறது. அதற்கேற்ப இந்த பொதுக்குழு அரசியலில் திருப்புமுனையாக அமையும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை அன்புமணி, மனைவி சவுமியா மற்றும் குடும்பத்தினருடன் திடீரென தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 6.15க்கு வந்த அன்புமணி இரவு 8.20 மணியளவில் வெளியே வந்து மீண்டும் வீட்டிற்குள் சென்றார். தொடர்ந்து இரவு 8.50 மணியளவில் வெளியே வந்தவர், செய்தியாளர்களை சந்திக்காமல் அங்கிருந்து இறுக்கமான முகத்தோடு குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார்.

தாய் சரஸ்வதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரிடம் ஆசி பெறுவதற்காக அன்புமணி குடும்பத்தினருடன் வந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்தபோதும் அவர்களை ராமதாஸ் சந்திக்கவில்லை என்றும், தாயை மட்டுமே சந்தித்து விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ராமதாஸ் தனது திருமண நாள் மற்றும் பிறந்தநாளை தைலாபுரம் தோட்டத்தில் கொண்டாடியபோது அன்புமணி வரவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.