திருச்சி: திருச்சியில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த பிளஸ்1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள இனியானூர் மேல தெருவை சேர்ந்தவர் பெரியசாமி(48). டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சத்யா. இவர்களது மகள் தர்ஷனா(16). தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மேலும் அவர் ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்தநிலையில் அவர் தனியார் மையத்தில் நடந்த நீட் முதல் பருவ தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட தர்ஷனா வழக்கம்போல் வீட்டின் மாடிக்கு படிக்க செல்வதாக கூறி சென்றவர் இரவு 7 மணியாகியும் கீழே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் சத்யா மாடிக்கு சென்று பார்த்தபோது அவர் மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறினார். இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தர்ஷனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து நீட் தேர்வு தான் காரணமா அல்லது வேறு எதுவும் பிரச்னையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.