பிளாஸ்டிக் அகற்றும் முகாமிற்கு பள்ளி மாணவர்களா?.. கலந்து கொண்டது பசுமைப்படை, ஜேஆர்சி மாணவர்கள்: தகவல் சரிபார்ப்பக்கம் விளக்கம்!!
சென்னை: பிளாஸ்டிக் அகற்றும் முகாமிற்கு பள்ளி மாணவர்களை வனத்துறை பயன்படுத்தியதா? என்பது குறித்து சரிபார்ப்பக்கம் விளக்கம் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கண்மாய்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் முகாமிற்கு பள்ளி மாணவர்களை வனத்துறை பயன்படுத்தியதாக காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். சிலர் வனத்துறை மீது தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது; இது திரிக்கப்பட்ட தகவல். விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வனத்துறை மற்றும் சா.கொடிக்குளம் பேரூராட்சி இணைந்து நடத்திய Mega Plastic Cleanup Drive முகாமில் பசுமைப்படை, ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் கலந்துகொண்டனர் என பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அதை திரித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.