இந்த அமர்வு வழக்கை விசாரிக்கக் கூடாதா? நள்ளிரவில் மனு தாக்கல் செய்தது ஏன்..? ஒன்றிய அரசு மீது தலைமை நீதிபதி சரமாரி தாக்கு
புதுடெல்லி: தீர்ப்பாயங்கள் நியமனம் தொடர்பான வழக்கில், தனது அமர்வு விசாரிக்கக் கூடாது என்பதற்காக ஒன்றிய அரசு முயற்சிப்பதாக தலைமை நீதிபதி கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது உச்ச நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனங்களை ஒரே மாதிரியாக மேற்கொள்ள உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. முன்னதாக, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தீர்ப்பாயங்களில் ஒரே மாதிரியான நியமனங்களைச் செய்ய இயலாவிட்டால் அவற்றை மூடிவிடுங்கள் என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர், ‘ஏற்கனவே இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பு வாதங்கள் அனைத்தும் முடிந்துவிட்டன. இந்த நிலையில் இதுபோன்ற கோரிக்கையை ஏற்க முடியாது. வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்பது உங்கள் நிலைப்பாடாக இருந்திருந்தால், அதை விசாரணையின் தொடக்கத்திலேயே தெரிவித்திருக்க வேண்டும்.
இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? எனது தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று ஒன்றிய அரசு விரும்புகிறது. அதனால்தான், நள்ளிரவில் இந்த வழக்கை உயர் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளீர்கள்’ என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
 
 
 
   