Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பெரும்பாக்கத்தில் 26,000 குடும்பங்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்? சென்னையில் பலரும் பாதிப்பு

சென்னை: பெரும்பாக்கத்தில் 26,000 குடும்பங்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுபோல, சென்னையில் பலரும் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னையின் பெரும்பாக்கம் குடியிருப்பில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் வேலை பெரிய பிரச்னையை எதிர்கொண்டுள்ளது. சுமார் 26,000 குடும்பங்கள் தங்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகளில் முழுமையான முகவரி இல்லாததாலும், முகவரி சரியாக இல்லாததாலும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என்ற பயம் ஏற்பட்டுள்ளது.

பல குடியிருப்பவர்கள் ஒரே கதவு எண்ணை பயன்படுத்துகிறார்கள், ஆனால் பிளாக் விவரங்கள் முற்றிலும் இல்லை. உதாரணமாக, ஒரே கதவு எண்ணில் 10 அல்லது 15 குடும்பங்கள் வசிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் எந்த பிளாக்கில், எந்த மாடியில் இருக்கிறார்கள் என்ற விவரம் எதுவும் இல்லை. இதனால் தேர்தல் அதிகாரிகளால் குடியிருப்பவர்களை கண்டுபிடிக்கவே முடியவில்லை. வாக்குச்சாவடி அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சரிபார்க்க வேண்டும், ஆனால் சரியான முகவரி இல்லாததால் யாரை எங்கே தேட வேண்டும் என்பதே தெரியவில்லை என்று சொல்கிறார்கள்.

இந்த பிரச்னை பெரும்பாக்கத்தில் மட்டும் இல்லாமல், சென்னையின் பல பகுதிகளிலும் இதேபோன்ற நிலைமை இருப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக அரசு கட்டிய குடியிருப்புகளில் வசிப்பவர்கள், வாடகை வீடுகளில் இருப்பவர்கள், புதிதாக குடியேறியவர்கள் ஆகியோர் இந்த பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். சென்னையில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த பிரச்னையை எதிர்கொள்ள நேரிடும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்த குழப்பத்தால் மக்கள் கடுமையான மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளனர். குடியிருப்பவர்கள் அரசியல் குற்றச்சாட்டுகளை விட, தங்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பற்றி தான் கவலைப்படுகிறார்கள்.

“நாங்கள் இங்கே பல வருடங்களாக வசிக்கிறோம், வரி கட்டுகிறோம், ஆனால் எங்கள் முகவரி சரியாக இல்லை என்பதற்காக மட்டுமே எங்களுக்கு வாக்களிக்கும் உரிமை போய்விடும் என்றால் அது எவ்வளவு அநியாயம்” என்று பெரும்பாக்கம் குடியிருப்பவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தேர்தல் அதிகாரிகள் இந்த பிரச்னையை தீர்க்க முயற்சி செய்து வருவதாக கூறியுள்ளனர். ஆனால் குறுகிய காலத்தில் இத்தனை பேரின் முகவரியை சரி செய்வது மிகவும் கடினமான வேலை என்றும் அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். இதனால் ஆயிரக்கணக்கான உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, தங்களுக்குள்ள மிக முக்கியமான ஜனநாயக உரிமையை இழக்க நேரிடலாம் என்ற அச்சம் பரவி வருகிறது.