Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

“உன் தாடி முளைத்தபோது.. சமூகத்துக்கு மீசை முளைத்தது”: தந்தை பெரியார் பிறந்தநாளை ஒட்டி கவிஞர் வைரமுத்து புகழ் வணக்கம்!!

சென்னை: உன் தாடி முளைத்தபோது சமூகத்துக்கு மீசை முளைத்தது என தந்தை பெரியார் பிறந்தநாளை ஒட்டி கவிஞர் வைரமுத்து புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவிதை;

உன் தாடி முளைத்தபோது

சமூகத்துக்கு மீசை முளைத்தது

இருட்டுச் சுவர்

இடியத் தொடங்கியது

கி.மு - கி.பி பழைய கணக்கு

பெ.மு - பெ.பி புதிய கணக்கு

நூற்றாண்டுகளாய்

எங்கள் புலிகள்

ஆடுகளுக்குப்

புல்பறித்துக் கொண்டும்

பல்தேய்த்துக் கொண்டுமிருந்தன

நகத்தில் கூர்மையும்

முகத்தில் மீசையும்

உண்டென்பதை

புலிகளுக்கு நீதான்

புலப்படுத்தினாய்

நீறுகளை ஊதி

நெருப்பை அடையாளம்காட்டிய

சுற்றுப்பயணச் சூறாவளி நீ

வர்க்கப் போரின்

இன்னோர் வடிவம்

உன் தர்க்கப்போர்

நீ சொன்ன பிறகுதான்

செருப்புத் தைத்தவன்

கையில் இருந்ததைக்

காலில் அணிந்தான்

நிர்வாணமாய்

நெசவு செய்தவன்

ஆடை சூடினான்

கலப்பையில் எழுதியவன்

காகிதத்தில் எழுதினான்

சூரியன் வந்ததும்

உடுக்கள் என்னும்

வடுக்கள் மறைவதுபோல்

உன் வருகையால்

வெள்ளை அழுக்கு

வெள்ளாவிவைத்து

வெளுக்கப்பட்டது

பழைமைவாதப் பாம்படித்ததும்

ஓலைக் குடிசைகளின்

ஒட்டடை அடித்ததும்

புலம்பும் புராணங்களுக்கெதிராய்ச்

சிலம்பம் சுற்றியதும்

உனது ஒற்றைக் கைத்தடிதான்

மூலக்கூறு பிரித்தால்

கடைசிவரை

தங்கம் தங்கம்தான்

உன் மரணத்தின்

முன் நிமிடம்வரை

நீ பேசும்புயல்தான்; பெரியார்தான்

கருப்பு நிலக்கரி வைரமாகக்

காலம் ஆகும்

கருப்பு வண்ணம் புரிதல்பெற

இன்னும் ஒரு யுகமாகும்

புகழ் வணக்கம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.