சென்னை: லண்டனில் உள்ள அம்பேத்கர் இல்லத்தில் பெரியாரும், அம்பேத்கரும் உரையாடும் புகைப்படத்தை கண்டது மிகவும் சிலிர்ப்பூட்டியது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அம்பேத்கர், லண்டன் பொருளியல் பள்ளியில் படிக்கும்போது தங்கியிருந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இல்லத்தை பார்வையிடும் வாய்ப்பினை பெற்றேன். அந்த இல்லத்தின் அறைகளினூடே நடந்து செல்கையில் பெரும் வியப்பு என்னுள் மேலோங்கியது.
இந்தியாவில் சாதியின் பேரால் ஒடுக்கப்பட்ட ஓர் இளைஞன், இங்குதான் தனது அறிவால் வளர்ந்து, லண்டனில் அனைவரது மரியாதையையும் பெற்று, பின்னர் இந்தியாவின் அரசியலமைப்பையே வடித்து தரும் நிலைக்கு உயர்ந்தார். குறிப்பாக, பெரியாரும் அம்பேத்கரும் உரையாடும் வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை அங்கு கண்டது மிகவும் சிலிர்ப்பூட்டியது. இப்படியொரு உணர்வெழுச்சி மிகுந்த தருணம் வாய்க்க பெற்றதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்! ஜெய் பீம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் செவ்வணக்கம்
சென்னை: லண்டன் நகரில் மாமேதை கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் செவ்வணக்கம் செலுத்தியது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: “தத்துவஞானிகள் இதுவரை உலகை பல வகைகளில் விளக்கியுள்ளனர்; ஆனால் நோக்கம் என்பது அதனை மாற்றுவதுதான்”.உழைக்கும் வர்க்கத்துக்கு ஒளி வழங்கிய சிவப்புச் சூரியனாம் மாமேதை கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் செவ்வணக்கம் செலுத்தினேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.