பெரம்பலூர் அருகே தெரணியில் 1 லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வை மாவட்ட கலெக்டர் மிருணாளினி தொடங்கி வைத்தார்
பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தெரணி கிராமத்தில், ஊரக வளரச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் இணைந்து நடத்திய பனை மரக்காடு திட்டத்தின் மூலம் 1லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வினை மாவட்ட கலெக்டர் மிருணாளினி இன்று தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தினை பசுமை போர்வை போர்த்தப்பட்ட மாவட்டமாக உருவாக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது, ஏற்கனவே மாவட்டத்தின் பல்வேறு பகுதிளில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் 2லட்சத்துக்கும் அதிகமாக மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக தற்போது, பனை மரத்தினை அதிக அளவு வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலும், பனை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாகவும் தெரணி கிராமத்தில் 1 லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும், பொதுமக்களும் ஏராளமாக கலந்துகொண்டு பனை விதைகளை நட்டு வைத்தனர். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் இன்று நட்டு வைக்கப்படும் அனைத்து விதைகளையும் முறையாக தண்ணீர் ஊற்றி நல்ல முறையில் பராமரித்து, வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் வாரியம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயபிரியா, உதவி பொறியாளர் வாணிஸ்ரீ, ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், பிரேமலதா, பாடாலூரில் ஸ்ரீ அம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் துணைத் தாளாளர் கேசவ் பாலாஜீ உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.