பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்டு வனத்துறையிடம் விவசாயி ஒப்படைத்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் அருகே பச்சமுத்து மகன் ரமேஷ்(38). என்பவரது விவசாய நிலம் உள்ளது. இன்று காலை ரமேஷ் தங்களது வயலில் பயிரிட்டுள்ள சின்ன வெங்காயம் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை கண்ட அந்த விவசாயி அதனை பிடித்து வைத்து கொண்டு, பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனக்காப்பாளர் மணிகண்டன் அந்த நட்சத்திர ஆமையை மீட்டு காப்பு காட்டில் விட்டார்.