Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொய்களை பேசி, பொய்யான வாக்குறுதி தரும் பாஜ பொருளாதாரம் வேகமா வளருதுன்னா மக்கள் ஏன் கஷ்டப்படறாங்க?: மோடிக்கு பிரியங்கா கேள்வி

ஃபதேஹர்சாஹிப்: இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் மக்கள் ஏன் வறுமையில் உள்ளனர்? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கேள்வி எழுப்பி உள்ளார். பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளுக்கும் வரும் ஜூன் 1ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. பஞ்சாப்பின் ஃபதேஹர் சாஹிப் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அமர் சிங் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஃபதேஹர் சாஹிப்பில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய பிரியங்கா காந்தி, “நாட்டில் 70 கோடி இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. மோடி ஆட்சியில் அரசு துறைகளின் 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என மோடி சொல்கிறார். நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளரும்போது அந்நாட்டின் மக்கள் ஏன் வறுமையில் உள்ளனர்? மக்கள் வாழ்வில் ஏன் முன்னேற்றமில்லை? இளைஞர்களுக்கு ஏன் வேலைகள் இல்லை? பொருளாதாரம் வேகமாக வளர்ந்தால் பணவீக்கம் ஏன் அதிகமாகிறது? எஃகு தொழிற்சாலைகள் ஏன் மூடப்படுகின்றன? ஜிஎஸ்டி வரி விதிப்பால் தொழில்துறை ஏன் நலிவடைகிறது?

நடுத்தர மக்களுக்கும், அவர்களின் முன்னேற்றத்துக்கும் எந்த திட்டங்களும் பாஜவிடம் இல்லை. பொய்களை மட்டுமே பேசி, பொய்யான வாக்குறுதிகளை தரும் பாஜ அரசில் முன்னேற்றம் என்பது தொலைக்காட்சி செய்தியில் மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் மக்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. மக்களை மதிக்காத பாஜ அரசு, மக்களின் பிரச்னைகள் பற்றி பேசுவதில்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்த, வேலையில்லா திண்டாட்ட பிரச்னைக்கு தீர்வு காண பாஜ அரசு என்ன செய்தது என்பது பற்றி பேசுவதில்லை. மக்களை பற்றி கவலைப்படும், சிந்திக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான்” என்று தெரிவித்தார்.