கர்நாடகாவில் மாரடைப்பால் மரணம் அதிகரிப்பதாக ஊடகங்களில் செய்தி: இதய பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் குவியும் மக்கள்
பெங்களூர்: கர்நாடகாவில் மாரடைப்பால் மரணங்கள் அதிகரிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது எதிரொலியாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதயம் பரிசோதனை மேற்கொள்ளுவதற்காக மக்கள் குவிய தொடங்கியுள்ளனர். இதய பாதிப்புகள் ஏதேனும் உள்ளதா என்று மருத்துவமனையில் பரிசோதனைக்கு காத்திருக்கும் கூட்டம். மக்கள் தங்கள் இதயம் சீராக உள்ளதா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள, கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
கர்நாடகவில் அண்மையில் மாரடைப்பு காரணமாக உயிரிழப்புகள் அதிகளவில் நேர்வதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக ஹாசன் மாவட்டத்தில் மட்டும் கடந்த 40 நாட்களில் 23 மரணங்கள் நேர்ந்ததாகவும், அவர்களில் 6 பேர் 10 முதல் 25 வயது வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், 8 பேர் 25 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தகவல் வெளிவந்தது. அதன் தாக்கத்தால் தான் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு நாளும் இதயத்தை பரிசோதிப்பதற்காக கூட்டம் பெருகிக்கொண்டு இருக்கும் நிலையில், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்வது மட்டுமே இதயம் சார்ந்த நோய்களில் இருந்து விடுபடுவதற்கான தீர்வாகாது என்றும், அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சி, உணவு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என்று விளக்கமளித்துள்ளார். இதற்கிடையே குறிப்பிட்ட மரணங்கள் நேர்ந்ததற்கான காரணம் குறித்து அறிவதற்காக கர்நாடக அரசு அமைத்த மருத்துவ குழு பல்வேறு பரிந்துரைகள் உடன் அண்மையில் தனது அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது.