அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஆப்கன் மீது நேரடி போர் நடத்தப்படும்: பாகிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்(டிடிபி) அமைப்பை அழிப்பதாக கூறி, ஆப்கான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே எல்லை மோதல் நீடிக்கிறது. கடந்த வாரம் இருநாடுகளிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனால் போர் பதற்றம் ஏற்பட்டது. இருநாடுகளிடையே அமைதியை ஏற்படுத்த கத்தார், துருக்கி நாடுகள் தலையிட்டு, பேச்சுவார்த்தை நடத்தின.
கடந்த 19ம் தேதி கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையே இரண்டாம் சுற்று அமைதி பேச்சுவார்த்தை துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் ஆப்கானின் உள்துறை துணையமைச்சர் ரஹ்மத்துல்லா முஜிம் தலைமையிலான குழுவினரும், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றுள்ளனர்.
அப்போது, விரிவான தீவிரவாத எதிர்ப்பு குறித்த திட்டத்தை ஆப்கானின் தலிபான் அரசிடம் பாகிஸ்தான் அளித்தது. இது குறித்து சியால்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், “இஸ்தான்புல்லில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளின் முடிவு விரைவில் தெரிய வரும். ஆனால் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஆப்கானிஸ்தான் மீது நேரடியாக பாகிஸ்தான் போரை தொடங்கும்” என்றார்.
