Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சமாதான பேச்சுவார்த்தை நடத்தக்கூட யாரும் இருக்க மாட்டீர்கள்: ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

மாஸ்கோ: சமாதான பேச்சுவார்த்தை நடத்தக்கூட யாரும் இருக்க மாட்டீர்கள் என ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா 28 அம்ச வரைவுத் திட்டத்தை முன்மொழிந்தது. இருப்பினும், இது முழுக்க முழுக்க ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பதாக உக்ரைன் மற்றும் ஐரோப்பியத் தலைவர்கள் விமர்சித்தனர். மேலும், இந்த ஒப்பந்தத்தில் ஐரோப்பியத் தலைவர்கள் பல மாற்றங்களையும் முன்மொழிந்திருந்தனர். ரஷ்யாவின் ஆதிக்கம் இருப்பதால் அநீதியான அமைதி ஒப்பந்தத்தைத் திணிக்கக் கூடாது என்று ஐரோப்பிய தலைவர்கள் வலியுறுத்தினர்.

இதற்கிடையே ரஷ்ய அதிபர் புதின் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் மோதல் அமைதி ஒப்பந்தத்தைச் சீர்குலைக்க முயற்சிப்பதாக தெரிவித்தார். ஐரோப்பாவுடன் போரை ஆரம்பிக்க எங்களுக்கு எந்தவொரு திட்டமும் இல்லை. ஆனால் அவர்கள் விரும்பினால், இப்போதே அதற்குத் தயாராக இருக்கிறோம். அவர்களுக்கு அமைதியை உருவாக்க எந்தவொரு திட்டமும் இல்லை. போரை நிறுத்த முயலும் அமெரிக்காவின் சமாதான முயற்சிகளை ஐரோப்பிய தலைவர்கள் சீர்குலைக்கிறார்கள். உக்ரைன் போர் தொடர்பாக டிரம்ப் ஒரு அமைதி ஒப்பந்தத்தை முன்மொழிந்திருந்தார்.

அது நாங்கள் ஏற்கும் வகையில் இருந்தது. ஆனால், ஐரோப்பியத் தலைவர்கள் அதை மாற்ற முயன்றனர். அமைதிச் செயல்முறையை முற்றிலும் தடுக்கவும், ரஷ்யாவிற்கு ஏற்க முடியாத கோரிக்கைகளை முன்வைக்கவும் ஐரோப்பிய தலைவர்கள் முயல்கிறார்கள். ரஷ்யாவுடன் ஐரோப்பிய நாடுகள் போரைத் தொடங்கினால், நாங்களும் போரிட தயார். சமாதான பேச்சுவார்த்தை நடத்தக்கூட யாரும் இல்லாதபடி, ஐரோப்பிய நாடுகள் ஒரு முழுமையான தோல்வியை சந்திக்கும். ட்ரம்பின் 28 அம்ச உக்ரைன் அமைதித் திட்டத்தை ஏற்க மறுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.