Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தட்டுப்பாட்டால் சுமார் ரூ.1000 கோடி இழப்பு பட்டா நிலங்களில் மணல் குவாரி திறக்க நடவடிக்கை: லாரி உரிமையாளர்கள் முதல்வருக்கு கடிதம்

சென்னை: பட்டா நிலங்களில் மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.முனிரத்தினம், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மணல் குவாரிகள் கடந்த 22 மாதங்களாக இயங்கவில்லை. தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நடைமுறைப்படுத்திய ஆன்லைன் மணல் விற்பனை திட்டம் தோல்வி அடைந்த காரணத்தால், மணல் லாரிகளுக்கு மணல் குவாரிகளிலிருந்து நேரடியாக மணல் தரவேண்டும். மணல் ஏற்றிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட டிப்பர் லாரிகளுக்கு மட்டுமே மணல் வழங்க அனுமதிக்க வேண்டும். கட்டுமான தொழிலை நம்பி தமிழகம் முழுவதும் 90 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் கடந்த 22 மாதமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் கட்டுமான தொழிலுக்கு ஒரு நாளைக்கு சுமார் 3,000 லோடு மணல் தேவைப்படுகிறது. தமிழகம் முழுவதும் கட்டுமான தொழிலுக்கு சுமார் 9,000 லோடு மணலும் தேவைப்படுகிறது. தமிழகம் முழுவதும் மணல் கிடைக்காத காரணத்தால் எம்சாண்ட், புளூ மெட்டல்ஸ் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள், கனிமவளத்துறை அதிகாரிகளுக்கும் பட்டா நிலங்களில் மணல் குவாரிகள் திறக்க முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

தற்போது பட்டா நிலங்களில் மணல் குவாரிகளின் இயக்கம் குறைந்த காரணத்தால் சிமென்ட் விலை, ஸ்டீல் விலையும் ஏற்பட்டுள்ளதால் கட்டுமான நிறுவனங்கள், மணல் லாரி உரிமையாளர்களுக்கு கடந்த 22 மாதமாக சுமார் 1000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பட்டா நிலங்களில் மணல் குவாரிகளை இயக்கவும், 90 லட்சம் கட்டுமான தொழிலாளர், 75,000 மணல் லாரி உரிமையாளர்களை காப்பாற்றவும் கோரிக்கைகளை ஆய்வு செய்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.