Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

75 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் திருப்பம்; நேபாள மாஜி பிரதமரின் பாஸ்போர்ட் முடக்கம்: வெளிநாடு செல்ல தடை; விசாரணை தீவிரம்

காத்மாண்டு: இளைஞர்கள் போராட்டத்தில் 75 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி உள்ளிட்ட 5 பேரின் பாஸ்போர்ட்டை முடக்கி அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. நேபாளத்தில் கடந்த 8 மற்றும் 9ம் தேதிகளில் இளைய தலைமுறையினர் நடத்திய மாபெரும் போராட்டத்தை போலீசார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியதில் 75 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை இழந்தார். இதையடுத்து, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுஷிலா கார்கி தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மற்றும் அதிகார அத்துமீறல் குறித்து விசாரிக்க கடந்த 21ம் தேதி நீதி விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது.

இந்த ஆணையம் தனது விசாரணையைத் தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரையின் பேரில், முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக், முன்னாள் உள்துறை செயலாளர் கோகர்ண மணி துவடி, தேசிய புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவர் ஹுதராஜ் தாபா மற்றும் காத்மாண்டு முன்னாள் மாவட்ட அதிகாரி சபி ரிஜால் ஆகிய ஐந்து பேரின் பாஸ்போர்ட்டை தற்போதைய நேபாள அரசு அதிரடியாக முடக்கியுள்ளது. நேற்று பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவால், அவர்கள் அனைவரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணை முடியும் வரை அவர்கள் காத்மாண்டு பள்ளத்தாக்கை விட்டு வெளியேற வேண்டுமென்றாலும் இடைக்கால அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு ஒருநாள் முன்பு பேசிய கே.பி. சர்மா ஒலி, ‘போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த நான் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தானியங்கி ஆயுதங்கள் காவல்துறையிடம் இல்லை. இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்’ என்று கூறியிருந்தார். ஆனால், ஒலியின் இந்தக் கூற்றை பாதுகாப்புப் படை வட்டாரங்கள் மறுத்துள்ளன. இதனிடையே, கே.பி. சர்மா ஒலி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களின் சட்டவிரோத சொத்துக்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்படும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.