புதுடெல்லி: டெல்லியில் நீதிமன்றத்திற்கு நீதிபதி வராததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கட்சிக்காரர் ஒருவர் பெண் வழக்கறிஞரைத் தாக்கியதாகவும், பதிலுக்கு அவரை வழக்கறிஞர்கள் சரமாரியாகத் தாக்கியதாகவும் வெளியான தகவல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், கடந்த 12ம் தேதி நடந்த மோதல் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், கட்சிக்காரர் ஒருவரை வழக்கறிஞர்கள் குழுவாகச் சேர்ந்து சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதுதொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கறிஞர்கள் தரப்பில் கூறுகையில், ‘நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிபதி வராததால், கட்சிக்காரர் ஒருவர் ஆத்திரமடைந்துள்ளார். அவர் தனது இளநிலை வழக்கறிஞரை படிக்கட்டுகளில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இதைத் தடுக்க முயன்ற பெண் வழக்கறிஞரைத் தாக்கி, அவரிடம் தவறாக நடந்துகொண்டாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக வழக்கறிஞர்கள், அந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது’ என்றனர். ஆனால், கட்சிக்காரர் தரப்பில் முற்றிலும் மாறுபட்ட குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஹர்ஷ் என்ற அந்த கட்சிக்காரர், தனது வழக்கு தொடர்பான கோப்புகளை வழக்கறிஞரிடம் திருப்பிக் கேட்டுள்ளார்.
அவர் கோப்புகளைத் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது, ஹர்ஷையும், அவருடன் வந்த 70 வயது தாயையும், சம்பந்தப்பட்ட வழக்கறிஞருடன் சேர்ந்து சிலர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த மோதல் சம்பவம் குறித்து, இரு தரப்பினரும் அளித்த புகார்களின் பேரில், டெல்லி போலீசார் இரண்டு தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். பெண் வழக்கறிஞரைத் தாக்கியதாக ஹர்ஷ் மீதும், அவரையும் அவரது தாயையும் தாக்கியதாக சில வழக்கறிஞர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.