சென்னை: கோபத்தின் உச்சத்தில் கட்சி நிர்வாகியை பளார் விட்ட சீமானுக்கு சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் எழும்பி வருகின்றன. செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்றுமுன்தினம் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரில், செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னன் கட்டியதாக யுனெஸ்கோ, உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்துள்ளது.
ஆனால் செஞ்சி கோட்டையை தமிழர் கோனேரிக்கோன் மன்னன் தான் கட்டினார் என்று நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சீமான் பேசிக்கொண்டிருக்கும்போது,கூட்டத்தின் ஒரு பகுதியில் சிலர் தொடர்ந்து கூச்சலிட்டும், கோஷங்கள் எழுப்பியும் இடையூறு செய்தனர். அவர்களை அமைதியாக இருக்குமாறு கட்சி நிர்வாகிகள் பலமுறை எச்சரித்தும், குழப்பம் நீடித்தது.
இதனால் கடுப்பான சீமான், கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், திடீரென மேடையின் முன்பகுதிக்கு சென்று அங்கிருந்து கீழே பாய்ந்து குதித்தார். ஒரு நபரை தாக்க முயன்றார். இதில், அவரைத் தடுக்க முயன்ற கட்சி தொண்டரையும் அவர் அறைந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அவரை சமாதானப்படுத்தி மீண்டும் மேடைக்கு அழைத்துச் சென்றனர். பொதுக்கூட்ட மேடையில் ஒரு கட்சியின் தலைவர் இவ்வாறு கோபத்தில் குதிப்பது இதுவே முதல் முறை என்பதால், இந்நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பல்வேறு விதமான விமர்சனங்களையும், விவாதங்களையும் உண்டாக்கியுள்ளது.
ஒரு கூட்டத்தை அமைதியாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது, கட்சியின் கட்டுப்பாட்டில் குறைபாடுகள் உள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. அதே சமயம் சீமானின் இத்தகைய ஆவேசமான நடவடிக்கைகள், அவரது பேச்சு மற்றும் செயல்பாடுகளால் அடிக்கடி பொதுக்கூட்டங்களில் பதற்றமான சூழல் உருவாகி, அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.