காத்மாண்டு : நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பல கட்டடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் நிலவி வருகிறது. கண்டிப்பூரில் உள்ள தொலைக்காட்சி அலுவலக கட்டடத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். நேபாளத்தில் பிரதமர், அமைச்சர்கள் இல்லம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அலுவலங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த நிலையில், நாடாளுமன்ற கட்டிடத்திற்கும் தீ வைக்கப்பட்டது. இந்த பரபரப்புகளுக்கிடையே பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதன் எதிரொலியாக நேபாளத்தில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் ராணுவம் வரவழைக்கப்பட்டது. ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற உள்ளதாகவும், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இலங்கையை போன்றே நேபாளத்தில் புரட்சி வெடித்துள்ளது. 2022ல் இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இலங்கையில் 2022 மார்ச்சில் தொடங்கிய மக்களின் போராட்டத்தை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறினார் கோத்தபய ராஜபக்ச. இலங்கையில் போராட்டத்தின்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே உள்ளிட்டோரின் வீடுகள் சூறையாடப்பட்டன.
*இந்தியர்கள் நேபாளம் செல்வதை தவிர்க்க ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
*நேபாளத்தில் பதற்றம் நிலவி வருவதால் இந்தியர்களுக்கு உதவி எண்களை அறிவித்தது இந்திய தூதரகம். அவசர உதவிக்கு +977 98086 02881, 98103 26134 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் வெளியுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டது.