புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியதும் குமரி ஆனந்தன் உட்பட மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காஷ்மீரில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி மக்களவை, மாநிலங்களவையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரினர்.
ஆனால் மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மைய பகுதிக்கு சென்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும் மோடி விளக்கம் தர வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதே போல், மாநிலங்களவையில் கீழடி ஆய்வு அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதில் ஒன்றிய பாஜக அரசு தாமதம் செய்வது குறித்து விவாதிக்க வேண்டும் என்று திருச்சி சிவா கோரினார். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க அவைத் தலைவர் ஜெகதீப் தங்கர் மறுத்துவிட்டார். இதனால் அவையில் குழப்பம் நிலவியது. இதனிடையே அடுத்த மாதம் 21ம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் 8 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.