Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார். கடந்த மே மாதம் 17 முதல் 25 வரை ஜப்பான் நாட்டின் கோபில் நடந்த 2024 பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழ்நாடு வீரர் மாரியப்பனுக்கு சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையை உயரிய ஊக்கத் தொகையாக வழங்கி வாழ்த்தினார்.

முன்னதாக, மாரியப்பன் 2019ம் ஆண்டு ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் நாட்டின் துபாயில் நடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக ரூ.30 லட்சம் காசோலை, 2020ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக ரூ.2 கோடிக்கான காசோலை, 2023ம் ஆண்டு சீனாவில் நடந்த ஆசிய பாரா போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக 30 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தாய்லாந்து நாட்டில் நடந்த சர்வதேச சக்கர நாற்காலி மற்றும் ஊனமுற்றோர் விளையாட்டு கூட்டமைப்பு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்காக ரூ.5 லட்சத்துக்கான காசோலை உயரிய ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, பயிற்றுநர் சத்யநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.