Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை துல்லியமாக செயற்கைக்கோள் உதவியுடன் அளவிடும் பணி 99% நிறைவு: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிஅதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஷ்நேவ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு வளாகம் கட்டும் பகுதியில் எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்று இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை செயற்கைக் கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் 99 சதவீதம் முடிவடைந்து விட்டது. இது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், சதுப்பு நிலத்தின் எல்லையை வரையறுக்கும் பணிகள் நடந்து வருவதாக குறிப்பிட்டார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டனர். அடுத்த விசாரணையின்போது தமிழக அரசு அளவிடும் பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.